இணையத்தில் ஆயிரம் பேசலாம் ஆனால் களம் வேறு மாதிரி இருக்கிறது


நெல்லையில் ஒரு வாக்கு சாவடியில் மாதிரி வாக்குப்பதிவுகளை அழிக்காமல் தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரிகள் செய்யும் தவறுகளுக்கு இயந்திரங்கள் மீது குற்றம் சாட்டி வருகின்றனர். இவர்கள் செய்யும் தவறுகளால் மொத்தமாக இயந்திரத்தின் நம்பகத்தன்மை கேள்விக்கு உள்ளாகிறது. இது போன்ற தவறுகளை உடனடியாக கண்டறிய வாக்குச்சாவடி முகவர்களால் முடியும்.
உதாரணமாக ஒருவர் வாக்களித்த பின்பு சந்தேகம் இருந்தால் வாக்குச்சாவடி முகவர் இதுவரை எத்தனை வாக்குகள் பதிவாகி இருக்கிறது என்பதை வாக்குசாவடி அதிகாரியிடம் கேட்டு தங்கள் கைகளில் இருக்கும் வாக்களிதவர்கள் பட்டியலுடன் ஒப்பிடாலே தெரிந்துவிடும். அதே போன்று ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை இந்த எண்ணிக்கையை சரிபார்த்தால் இத்தகைய குழப்பத்தை தவிர்க்க முடியும் அல்லது அந்த குழப்பத்தை உடனடியாக கண்டறிய முடியும். இதனை சரி செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு கூடுதல் பயிற்சி தேவை என்று நினைக்கிறேன்.
நான் வாக்களித்த சாவடியில் 7 மணிக்கு துவங்க வேண்டிய வாக்குப்பதிவு 8 மணிக்கு மேல் தாமதமாக துவங்கியது அதற்கு காரணம் இயந்திரத்தில் கோளாறு என ஒரு காரணத்தை மட்டுமே வெளியே சொன்னார்கள் ஆனால் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அதிகாரியின் அலட்சியம் காரணமாக Close பொத்தான் அழுத்தப்பட்டு மீண்டும் இயந்திரத்தை வாக்குப்பதிவு செய்ய வேண்டிய நிலைக்கு கொண்டுவர நேரமானது இது இயந்திரத்தின் தவறு அல்ல. இதற்குகிடையே வெளியே வாக்களிக்க காத்து இருந்தவர்கள் ஏன் இவ்வளவு தாமதம் எப்போது வாக்குப்பதிவு துவங்கும் என்று சத்தம் போட்டனர். நாங்கள் இப்போது என்ன செய்ய? என்ற கேள்வியை கேட்க இயந்திரத்தில் கோளாறு என்ற பதில் திரும்ப திரும்ப சொல்லப்பட்டது. எல்லாவற்றையும் கவனித்த காவல்துறை அதிகாரி இங்கு சத்தம் எல்லாம் போட கூடாது வந்து வண்டியில் ஏறுங்கள் என்று பதில் சொன்னார். அவரும் இங்கு என்ன பிரச்சினை என்பதை காது கொடுத்து கேட்க தயாராக இல்லை. அதற்குள் "நாங்கள் என்ன அடிமைகளா" என்ற அடுத்த கேள்வியை கேட்டார் பின்னால் இருந்தவர்.(இணையத்தில் கேள்வி கேட்பதற்கும் களத்தில் கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது) கேள்வி கேட்ட எல்லாரும் சுமார் 60 வயதை கடந்தவர்கள். நடப்பது புரியாமல்தான் அவர்கள் கேள்வி கேட்கிறார்கள். அவர்களிடம் காவல் துறை இப்படி நடந்தது கொஞ்சமும் ஒவ்வாத செயல் இதை இங்கு எழுத காரணம் இணையத்தில் ஆயிரம் பேசலாம் ஆனால் களம் வேறு மாதிரி இருக்கிறது. வாக்களிக்க வந்தவர்களில் சுமார் 97% வயதானவர்கள் இங்கு மாற்றம் குறித்து எல்லாம் பேசும் கூட்டம் வாக்குச்சாவடி பக்கம் வருவதில்லை. (இது குறித்து இன்னும் விரிவாக எழுத வேண்டிய அவசியம் இருக்கிறது. இப்போது எழுதினால் தடம் மாறும்).
பூத் சிலிப் சரியான நேரத்தில் வாக்காளர் கைக்கு வருவதில் இன்னும் சிக்கல் இருக்கிறது. வயதானவர்களுக்கு இணையம் வழியாக எந்த வாக்குச்சாவடி என கண்டறிந்து வாக்களிக்க உதவ இந்த தலைமுறை களத்திற்கு வரவேண்டும். திட்டங்களுக்கும் நடைமுறைக்கும் இடையே தலைமுறை அளவு இடைவெளி இருக்கிறது. ஆனால் இந்த தலைமுறையின் அரசியல் வாட்ஸ்அப் உள்ளே மட்டுமே இருக்கிறது. அவர்கள் களத்திற்கு வராமல் திட்டங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் இடையே ஆன இந்த இடைவெளியை நிரப்ப இயலாது.

Comments

About Me

Rathinasamy

Rathinasamy

Surandai Chennai

Blog Archive