வடலி தமிழ் முற்றத்தின் முதல் இலக்கிய சந்திப்பு



2017 சுரண்டை புத்தகத் திருவிழாவில் வாசகர் வட்டம் துவங்க வேண்டும் என்று முடிவு எடுத்து இருந்தோம். எங்களுடைய கவன குறைவால் அதனை துவங்க முடியாமல் போனது. 2018 புத்தகத் திருவிழா குறித்த திட்டமிடல் தொடங்கிய நாளே வாசகர் வட்டம் துவங்க வேண்டும் என்ற கருத்தும் அதற்கு பெயர் தேடும் படலமும் அதோடு பிணைக்கப்பட்டது. ஆனால் சில நடைமுறை சிக்கல் மனதின் ஓரம் ஒரு வித பயத்தை அளித்துக்கொண்டே இருந்தது. சுரண்டை வாசகர் தான் வாசிக்கும் புத்தகத்தை எதன் அடிப்படையில் தேர்வு செய்வார்கள் என்ற உரையாடல் எல்லாம் நண்பர்களுடன் மணிக்கணக்கில் நீண்டது. அதன் வழியாக வாசகர் வட்டம் என்பதை தாண்டி தமிழ் மன்றமாக பரிணமித்தது. மேலும் இந்த வட்டாரத்தில் வரலாற்றில் தடம் பதித்த மாமனிதர்களையும் அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற ஆசையும் உருவானது. இந்த வாசிப்பில் கிடைத்த உணர்வுகளை கடத்திவிடவும் இலக்கியம் முன்னெடுக்கும்  சமூக உரையாடலை நிகழ்த்த இந்த தளத்தை பயன்படுத்தலாம் என முடிவு எடுத்தோம். இளம் படைப்பாளர்களை உருவாக்க சில திட்டங்களை வகுத்து இளம் எழுத்தாளர்கள் உடன் ஆலோசனையும் நடைபெற்றது. இதன் விளைவாக 2018 புத்தகத் திருவிழாவில் வடலி தமிழ் மன்றம். வடலி தமிழ் முற்றமாக அதன் திட்டங்களுக்கும் செயல்பாடுகளும் அடங்கிய உறுப்பினர் சேர்க்கை படிவம் கொடுக்க துவங்கினோம். புத்தகத் திருவிழா முடிந்த பின்னரும் அனுபவம் மிக்க பலரின்  வழிகாட்டலும் வாழ்த்துகளும் ஆர்வத்தை அதிகமாக்கியது. கடந்த மாதம்தான் இதன் முதல் கூட்டத்தை டிசம்பர் 15 ஆம் நாள் நடத்தலாம் என முடிவு எடுத்தோம். முதல் சந்திப்பில் முதல் புத்தகமாக சுகாவின் மூங்கில் மூச்சு குறித்து பேசலாம் என முடிவு செய்தோம். திருநெல்வேலி பேச்சு வழக்கில் இங்கு நடைபெற்ற சமூக மாற்றங்களையும், இந்த மக்களின் ரசனையையும் பதிவு செய்வது மட்டுமல்லாமல் இங்கு நடக்கும் சமூக கேடுகளையும் எள்ளி நகையாடும். முதல் சந்திப்பு இந்த நிலத்தின் நினைவுகள்  இதை இளம் வாசகர்கள் பேசினால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்திய உடனே மூத்தோர்கள் வழி விட்டனர். அவர்களுக்கு நன்றி எவ்வளவு சொன்னாலும் தீராது. இளையோர் பேச அதை மூத்தோர் கேட்க என இந்த சந்திப்பின் சுவாரசியம் அதிகமானது.

நேற்றைய நிகழ்வின் முதல் அமர்வில்  இலக்கியம் எதற்காக, சுரண்டை புத்தகத் திருவிழா, வடலி தமிழ் முற்றம் பெயர்க்காரணம், பெண் எழுத்தாளர்கள் மற்றும் ஆபிரகாம் பண்டிதர் குறித்து பேச முடிந்தது.

இரண்டாம் அமர்வில் சகோதரி டொமினிக் டிரிப்சி ஆரோ, சகோதரர்கள் மகேந்திரன் மற்றும் ராஜேஸ் குமார் மூங்கில் மூச்சு குறித்து பேசிய பேச்சு எல்லாம் பார்க்கும் போது இவர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது. குறிப்புகள் இல்லாமல் பேசுவது, சுகா பயன்படுத்திய வார்த்தைகள் குறித்து எல்லாம் விரிவாக பேசியது. அந்த வார்த்தை அப்படி பயன்படுத்த வேண்டிய அவசியம் அதனால் அந்த கட்டுரை எவ்வளவு அழுத்தம் பெற்றது என்பதை இளம் வாசகர்களிடம் எதிர்பாராத ஒன்று. இவர்களுடைய வாசிப்பு அனுபவத்தின் உச்சம் என்பது படைப்பின் கதாபாத்திரத்தில் தங்களை இணைத்துக் கொண்டது. வாசிப்பின் வழியாக அடையும் தரிசனம் இவர்களை ஆட்கொண்டதை காண முடிந்தது.

ஒரு அண்ணனாக சுகா தன் அனுபவங்களை கடத்திவிட வாசிப்பின் வழியாக இவர்கள் உள்வாங்கி பேசியதை பார்த்த போது இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கூடுதல் மகிழ்ச்சி மற்றும் உதவி செய்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.
நிறைவான சந்திப்பு இன்னும் நிறைய உரையாடுவோம் அடுத்த சந்திப்பில்...

பரணியோடு பிறந்தவள்
வைகையோரம் வளர்ந்தவள்
அவளுக்கு அணிகலன் சூடியே 
எம் மூன்னோர்கள் தனக்கான
அடையாளம் தேடிக் கொண்டனர்.
அந்த தடத்தில் தமிழோடு நாமும்...! 

Comments

About Me

Rathinasamy

Rathinasamy

Surandai Chennai

Blog Archive