கைகொடுப்போம் #SaveDelta
ஒரு பேரிடர் ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பதை நாம் அனைவரும் வெவ்வேறு வடிவங்களில் உணர்ந்து இருக்கிறோம். 2015 இறுதியில் இரண்டு நாட்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடக்கப்பட்டு இருந்த போது குழந்தைக்கு பால் பவுடர் மட்டுமாவது இருக்குமா என்று கேட்ட குரல்களின் நினைவுகள் இன்று மீண்டும் மீண்டும் வந்து போகின்றன. அதில் இருக்கும் ரணங்கள் உணர முடிகிறது. அந்த குரல்கள் தொல்லைகள் செய்கிறது வெறுமனே வேடிக்கை பார்த்து விடாதே என உள்ளுணர்வு கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கிறது. மேலும் களத்தில் இருந்து வரும் செய்திகள் அதிர்ச்சிகள் அளித்து கொண்டே இருக்கிறது. திருவாரூர் அண்ணன் ஒருவரிடம் பேசியபோது "இங்கு எல்லாம் பெரிய பாதிப்பு இல்லை தம்பி. இன்னும் பல கிராமங்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளது. நாளை காலையில் அங்கு எல்லாம் செல்ல வேண்டும். அதற்காக நண்பர்களை ஒருங்கிணைத்து கொண்டு இருக்கிறேன்" என ஒரு பின்னிரவில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். இன்னும் பல நண்பர்கள், அண்ணன்கள் சென்னையில் இருந்து கிளம்பிய வண்ணம் இருக்கிறார்கள். சத்தமில்லாமல் பல்வேறு இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில கார்ப்ரெட் நிறுவனங்கள் கூட தங்கள் ஊழியர்கள் வழியாக பல்வேறு மாநிலங்களில் இருந்து மருந்து பொருட்கள் எல்லாம் வரவைத்து அங்கு கொண்டு சேர்த்து வருகிறார்கள்.
நான் நண்பர்களிடம் வேண்டிக்கொள்வது எல்லாம் தங்களால் இயன்ற பொருள்களை தங்கள் நண்பர்கள் வாயிலாகவோ அல்லது வேலை செய்யும் நிறுவனம் வாயிலாக அளியுங்கள்.
உங்களுக்கு வந்து சேரும் தகவல்களை வெறும் செய்திகளாக மட்டும் கடந்துவிடாமல், அதன் பின்னால் இருக்கும் வலிகளை நாமும் இந்த வாழ்வின் ஏதேனும் ஒரு தருணத்தில் கடந்திருப்போம். அந்த கனமான தருணத்தை அவர்கள் கடந்து வர கைகொடுப்போம்.
Comments
Post a Comment