நாஞ்சில் பயணம்

 நாஞ்சில் நாடு எப்போதுமே என்னை அதிகமாக ஈர்க்கும் இடமாகவே இருக்கிறது ஜீவா, நேசமணி என தமிழ் சமூகத்தின் ஈடு இணையற்ற மாமனிதர்களை  உருவாக்கிய மண் அல்லவா. சேர தேசத்தின் சாயலில் இருந்தாலும் தமிழுக்கு அதிகதிகம் பேசிய மனிதர்கள் அதிகம். ஒரு பக்கம் நின்று பேசுவது எளிது மையத்தில் நின்று பேசி தன் பக்கத்திற்கு எல்லாரையும் இழுப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. ஆனால் இந்த நாஞ்சில் நாட்டு காரர்களுக்கு அது இயல்பிலே இருக்கிறது அவர்கள் வரலாறும் அப்படித்தான் இருக்கிறது.
திடீர் பயணம் என்பதால் நிறைய சமரசங்களுக்கு இடையே தான் பயணம் துவங்கியது. அப்பாவின் விருப்பமான நெல்லை சரவண பவன் காலை நம்மை ஒரு வழியாக காப்பாற்றி விட்டது. ரதவீதியில் நின்று பழைய நினைவுகளை அசை போட்ட போதே ஜீவா ஒட்டிக்கொண்டு விட்டார். அவர் நின்று முழங்கிய இடம் அவர் நினைவு வராமல் போனால்தான் ஆச்சர்யம்.
20 வருடங்களுக்கு முன்பு போன பத்மநாபபுரம் அரண்மனை குறித்த நினைவுகள் எதுவும் இப்போது இல்லை பழைய ஆல்பத்தை வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு காட்டும் போது பார்த்து கொள்வதோடு சரி. நேற்று அவற்றை மீண்டும் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்த போது இந்த பயணத்திற்காக எப்படி வேண்டுமானால் சமரசம் செய்து கொள்ளலாம் என மனம் மாறிப்போனது. பத்மநாபபுரம் அரண்மனை மற்றும் அருங்காட்சியகம், திற்பரப்பு அருவி தொட்டி பாலம் என சுற்றி வந்தேன்.

பூதப்பாண்டி என்ற பெயர் பலகையை பார்த்த உடனே நாம் அவ்வழியாக போவோமா என கேட்டேன். இல்லை அது கொஞ்சம் சுற்று என பதில் வந்தது ஏற்கனவே தாமதம் மற்றும் ஒரு பாலம் வேலை நடப்பதால் கொஞ்சம் சுற்று என எல்லாரும் சிரமங்களுக்கு உள்ளாகி இருந்ததால் ஜீவாவின் பூதப்பாண்டி அடுத்த முறை பார்த்து கொள்ளலாம் என மனதை சமாதான படுத்தி கொண்டேன்.

பத்மநாபபுரம் அரண்மனை கேரளாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது கேரளாவின் தொல்லியல் துறை அதிகாரிகளை பார்த்தால் கொஞ்சம் பொறாமையாகதான் இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு இப்படி எல்லாம் அதிகாரிகள் எப்போது கிடைப்பார்கள்!!! பார்வையாளர்களை சங்கடப்படுதாமல் அதே நேரம் விதிமுறைகளை கொஞ்சம் கறாராக கடைப்பிடிக்கிறார்கள். அப்பா பழைய கதைகளை சொல்லிக்கொண்டே வந்தார்கள் முன்பு இவ்வளவு கட்டுப்பாடுகள் இல்லை என்று அவர் பேச்சு உறுதி செய்தது. 
அருங்காட்சியகம் கொஞ்சம் ஆயுதங்கள், சிலை, செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுகள் நிறைந்து காணப்பட்டது. நமக்கான தென்காசி சம்பந்தபட்ட சில செப்பேடுகள் மற்றும் கல்வெட்டு தென்பட்டது. கொல்லத்தில் உள்ள ஒரு தெரு பெயர் மாற்றம் தொடர்பான கல்வெட்டு கொஞ்சம் நாம் இப்போது பயன்படுத்தும் வடிவம் கொண்ட தமிழ் மொழியில் காண முடிந்தது.
அம்மை மீன்முள் எடுத்து தர தயார்நிலையில் இருந்த போதும் மீன் குழம்பு கிடைக்கவில்லை. 4 மணிக்கு மதிய சாப்பாடு சாப்பிட வந்தால் எப்படி கிடைக்கும் அதுவும் சண்டே சீக்கிரமே காலியாகி விடும் என்றார் அந்த கடையின் கல்லாப்பெட்டியில் இருந்தவர். நாஞ்சில் நாட்டு மீன் குழம்பும் கிடைக்கவில்லை.


மாத்தூர் தொட்டி பாலம் எல்லாம் இன்னும் அதிக கவனத்தோடு பராமரிக்க மற்றும் பாதுகாக்க வேண்டிய ஒன்று. என்னதான் நாம் நினைத்தாலும் தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறையும் நீர்வள அமைப்பும் நினைக்க வேண்டும்.

Comments

About Me

Rathinasamy

Rathinasamy

Surandai Chennai

Blog Archive