உபசாரம் - சுகா - வாசிப்பனுபவம்



எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களது முன்னுரை உபசாரம் புத்தகத்தின் தன்மை குறித்து, வாசகனின் மனதில் எழும் கேள்விகளுக்கு அழகான பதிலாக அமைந்துவிடுகிறது. நூலின் முதலாவது கட்டுரையில், ஒரு கவிதைப் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சுகா அவர்களை அழைக்கும் எழுத்தாளர் ஜெயமோகன், “கவிஞருக்கு திருநெல்வேலிதான்என்று சொல்ல,  “அப்பம் நல்ல கவிஞராத்தான் இருப்பாரு வாரேன்" என்கிறார்.

திருநெல்வேலி மனிதர்கள் எங்கிருந்தாலும் தங்கள் ஊர் பற்றிலும்  அபிப்ராயத்திலும் எந்த இடத்திலும் சமரசமோ, விட்டுக் கொடுப்பதோ செய்துகொள்வதில்லை.

"மூங்கில் மூச்சு" ஏன் அது வெளிவந்து இவ்வளவு காலத்திற்குப் பிறகும் தொடர்ந்து நல்ல வாசகனால் கொண்டாடப்படுகிறது என்றால் நெல்லை வேணுவனத்தின் இயல்பான வாழ்வியலையும், அந்நகரத்து மனிதர்களின் அன்பையும் அது அளவில்லாமல்  பிரதிபலிக்கிறது. எல்லோருக்கும் குஞ்சுவைப் போல் ஒரு நண்பன் வாய்த்துவிடுகிறான். சுகா தன்னோடு வாழ்கிற, நட்புபேணுகிற,  வளவுகளில் சந்திக்கிற மனிதர்களையே தன்னுடைய எழுத்தின் வழியே கதாபாத்திரங்களாக உருமாற்றிக் காட்டுகிறார். அவர்களின் இயல்பை அப்படியே விட்டுவிட்டு பெயர்களை மாற்றிப் போட்டுவிட்டால் அவர்களில் எவரேனும் ஒருவராக நாம்கூட இருந்துவிடுவோம். 

திருநெல்வேலி என்ற சொல் இந்த புத்தகத்தில் "திருநவேலி" என்று பேச்சு வழக்கில்தான் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அது  எய்யா! இப்பதான் விசாரிச்சேன். உனக்கும் திருநவேலியாம்லா? எனக்கு கொக்கிரகுளம்என்ற பாட்டியின் பேச்சில் அதை முழுமையாக உணரமுடிகிறது. டீக்கடை என்ற கட்டுரையில் ஒரு தாத்தா "திருநோலி" என்ற உச்சரிப்பில் திருநெல்வேலியை குறிப்பிடுகிறார். திருநெல்வேலி என்ற சொல்லை வேகமாக  உச்சரித்தால் ஓலி வடிவம் "திருநோலி". மேலும் இந்த கட்டுரை ஆழ்வார்குறிச்சி, திருநெல்வேலி டவுன், சிவகளை, ஸ்ரீரங்கம் (ஸ்ரீரங்கத்திலும் ஒரு மூங்கில் மூச்சு வாசகர் இருக்கிறார்.), சாலி கிராமம், அண்ணா நகர், வட பழனி என டீக்கடை அனுபவம்.

சாப்பாட்டுக் கடை என்ற கட்டுரையில் சாலிகிராமத்திலிருந்த கழுகுமலைக்காரர் நடத்திய ஹோட்டலுக்கு போகும்போது சாலிகிராமம் மறைந்து சேரன்மகாதேவி வந்துவிடும் என்று சுகா குறிப்பிடுகிறார் ஊர்ப்பாசம். இந்த கட்டுரையில் பக்கம் 53  இறுதி 2 பத்தியும் பக்கம் 54 முதல் பத்தியும் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்தவர்களால் உணரமுடியும். பக்கம் 98 முழு பக்கமும் உங்களுக்குத்தான் யாரிடமாது புத்தகத்தை இரவல் வாங்கியேனும் இந்த பகுதிகளை படித்து விடவும். 

உபசாரம் இந்த கட்டுரையின் தொடக்கம் வேணுவனத்தில் படித்து இருக்கலாம். இந்த கட்டுரை உபசாரம் குறித்து பேசுகிறது. இங்கேயும் திருநெல்வேலிகாரர்தான் அதிகமாக நினைவில் இருக்கிறார்.   

ஜெயகாந்தன் அஞ்சலி

எங்கெ வச்சு பேசுறதுன்னு இருக்குல்ல! இந்த இடத்துல அவர் பேசித்தானே நாம கேட்டிருக்கோம்! இன்னிக்கு அவர் போயிட்டாருன்ன உடனே நாம பேசலாமா? - எஸ் ரா.

மத்த மொழிக்காரங்கக்கிட்ட நமக்கான மரியாதைய ஏற்படுத்திக் குடுத்தவரு. பாருங்க. இங்கே நாம எத்தனை பேரு இருக்கோம்! நெஞ்சு கொதிக்குது தோழர். - பெயர்தெரியாத தோழர்

இதென்ன கேரளவாடே! தமிள்நாடுல்லா! - சுகா

இந்த கட்டுரை ஒரு வரலாற்று பதிவு என்பதில் வாசகருக்கு வேறுபட்ட கருத்துக்கள் இருக்க முடியாது.


 அடுத்த கட்டுரையில் ஜெயகாந்தனை ஒத்துக் கொள்ளாத வெங்கட் சாமிநாதனை படிக்காமல் இருந்தால் நமக்கு ஒன்னும் இழப்பில்லை என்ற மனநிலையில் இருந்த சுகாவிடம் ஜெயகாந்தன், “இப்படியெல்லாம் முன்முடிவோடு  சிலரது எழுத்துக்களை ஒதுக்க நினைத்தால், உங்கள் வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டுவிடும். அப்படிப் பார்த்தால், ஜெயகாந்தனையும் நீங்கள் ஒதுக்கத்தான் செய்யணும்.என்கிறார்.

அதற்கு பிறகு சுகாவிற்கும் வெங்கட் சாமிநாதனுக்கும் இடையே மலர்ந்த நட்பு, அவர்களுக்கிடையே நடந்த உரையாடல் குறித்தும் சுகா விரிவாக எழுதி இருக்கிறார். ஆசான்களின் ஆசான் என்று இன்னோரு கட்டுரையும் ஜெயகாந்தனைப் பற்றி இருக்கிறது. அந்த கட்டுரையில் ஜெகே பற்றி இளையராஜா வாழ்க்கைல எத்தனையோ பெரிய ஆட்களப் பார்த்தாச்சு. ஆனா நான் பாத்ததிலேயே ஹீரோன்னா அது ஜெகேதான்ப்பாஎன்கிறார்.  

இந்த சுடலைமாடன் கோவில்தெரு தலைமுறை கடந்தும் வாசகர்களுக்கு எப்போதுமே பிரியமான இடமாகவே இருக்கிறது. அம்பாசமுத்திரம் ஆறும் செங்கோட்டை ரயிலை நின்று  பார்க்கும் என்று எழுதும் துணிவு அந்த சுடலைமாடன் கோவில் தெருவிற்கு மட்டுமே உண்டு. வண்ணதாசன் என்னும் ரசிகருக்கு ரசிகனாக ஒரு கட்டுரையும் இருக்கிறது. அதில் எங்களின் முன்னோடியாக சுகா இருக்கிறார். இயற்கை ரசிகனின் ரசிகர்கள் நாங்கள். 

உபசாரம் புத்தகத்தில் எத்தனை இடங்களில் உடன்பாடு, முரண்பாடு இருந்தாலும் ஒரு ஜெகேவும், வண்ணதாசனும் ஆக்கிரமித்து நிற்கும் இந்த பங்களுக்காகவே அதிகம் விரும்புகிறேன். இவை சுகாவின் எழுத்துகள் மட்டுமல்ல எங்களை போன்ற வாசகர்களின் மனசும் தான். அதனாலே அதிக பிடித்துப் போகிறது சுகாவையும் அவர் எழுத்தையும். மனங்களை எழுதுகிற எழுத்தாளன். 

எம்.ஸ்.வியுடனும், பாலுமகேந்திராவுடனுமான 21 வருட உறவை எப்படி அந்த ஒரு கட்டுரையில் அடைப்பது. இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம். ஆனாலும் சுகாவின் வாழ்வில்  அதிகபட்ச இன்பமாகவும், அதிகபட்ச துன்பமாகவும் கடந்த நிகழ்வினைச்  சுமந்து நிற்கிறது. 

அடுத்து ஒரு பயணம் மற்றும் திருவண்ணாமலை பயணமும் முடிந்து தூங்காவனம் தொடங்கிவிடுகிறது தெலுங்கானா தோசையும் சாய்லட்சுமியின் இசையும் கொஞ்சம் நகைச்சுவையாக உபசாரம் நகர்ந்து, கீரைக்கார ஆச்சி... ஏக்நாத்தின் "ஆங்காரம்" என உபசாரம் தன்னை நிப்பாட்டிக் கொள்கிறது. 

இந்த புத்தகம் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்தவர்களைப் பற்றி அதிகதிகம் பேசுகிறது. அவர்களோடு உரையாடுகிறது. முழுவதும் வாசித்து முடித்தபிறகு அப்படி எதிர்பட்ட ஊர்க்காரர்களின் பெயர்களை மனம் பட்டியல்போடுகிறது. படம் முடிந்தபிறகும் நகரும் கூட்டத்துக்கு இடையே அசையாமல் நின்றுகொண்டிருக்கும் பார்வையாளன் தனக்குத் தெரிந்த நண்பனின் பெயரைத் தேடுவதுபோல.

அவர்கள்

குமாரகுருபரன்,
ஹரன் பிரசன்னா,
ஷிமோர்,
கார்த்திக் புகழேந்தி 
மாரி செல்வராஜ்
பி. ஏ. கிருஷ்ணன்
டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸ்… 

இப்படியாக இன்னும் சிலர்… 

-ரத்தினசாமி


Comments

About Me

Rathinasamy

Rathinasamy

Surandai Chennai

Blog Archive