சங்கரன்கோவில் வரலாறு - அ.பழநிசாமி, ப.அருணகிரிநாதன் - வாசிப்பனுபவம்
வரலாறு என்றால் நம் நினைவிற்கு வருவது மன்னர்களும் அதன்பின்
தலைவர்களும் மட்டுமே. ஆனால் சங்கரன்கோவில் வரலாறு என்ற இந்தப் பொத்தகம்
சாமானியர்களின் நிகழ்வுகளை தாங்கி நிற்கின்றது. நூல் ஆசிரியர்கள் இருவர்.
ஒருவர் அ. பழநிசாமி, பி.காம். உள்ளாட்சிப் பிரதிநிதி தன் அனுபவங்களையும்,
இன்னொருவர் வரலாற்று எழுத்தாளர் ப. அருணகிரிநாதன் தன் ஊர்
மக்களின் வாழ்வியலையும் வரலாறுகளையும் எழுதி இருக்கின்றார்கள். இந்த நூலை இரண்டு
தனித்தனி நூல்களாகவே வெளியிடும் அளவிற்குத் தகவல்கள் இருக்கின்றன.
உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் அனுபவங்கள் குறித்து ஜோதிமணியின்
"நீர் பிறக்கும் முன்" தவிர நூல்கள் இல்லை என்றே நினைக்கின்றேன். அந்தத்
தேடலில் எனக்கு இந்த நூல் கிடைத்தது மகிழ்ச்சியே. அரசியல் தலைவர்கள் வரலாறுகளை
எழுதும் போது ஒருதலைபட்சமாக எழுதி விடலாம். ஆனால் ஒரு உள்ளாட்சி பிரதிநிதிகள்
குறித்து எழுதும்போது அப்படி எழுத முடியாது. காரணம், அவர்கள் மக்களோடு கலந்து இருப்பவர்கள் அவர்களின் வாழ்வியல் திறந்த
புத்தகம் போன்றது. (இன்று அப்படி இல்லை அதனால்தான் மக்கள் அவர்களை வெறுத்து
ஒதுக்குகிறார்கள்).
அ. பழநிசாமி அவர்கள் நிர்வாகத்திறனும் எளிமையும் அவருடைய பலம்
என்றாலும்
அவரின் தனித்துவம் ஒன்று இருக்கின்றது. தன் கொள்கைகளை எதற்கும்
சமரசம் செய்யாமல் வாழ்ந்து இருக்கின்றார். ஆனால் பொது நிகழ்விற்காக அனைவருடனும்
இணைந்து செயல்படுவது மற்றும் எல்லாரையும் சமமாக நடத்துவது இந்த பழக்கம்
அரசியலுக்கு வரும் அனைவரிடம் இருக்க வேண்டியது. மாநில அரசின் திட்டங்களை
மக்களுக்கு ஏற்றவாறு மாற்றுதல் போன்றவை கொஞ்சம் சிக்கலான பணி உள்ளாட்சிப்
பிரதிநிதியின் தொலைநோக்கு பார்வையால் மட்டுமே இது சாத்தியம். தன் திட்டங்களை மாநில
அரசின் திட்டங்களாக மத்திய அரசின் திட்டங்களாக மாற்றும் தன்மை கொண்டவர். இறுதிவரை
நகர்மன்றத் தலைவர் பதவியைத் தாண்டி வரவில்லை என்பது ஆச்சர்யமே.
சங்கரன்கோவில் தல வரலாறு, தேவநேயப் பாவாணர் சங்கரன்கோவில்தான் என்பதற்கான சான்றுகள், சுல்தான் பிரியாணி வரலாறு. வண்ணப் படங்கள் இந்தப் புத்தகத்தின் கூடுதல்
பலம். சுல்தான் பிரியாணி நமக்குத் தெரியும் ஆனால் ராசா அல்வா கடை இப்போதுதான்
தெரியும். நகரின் தமிழ் அறிஞர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், இன்றும் குதிரை வண்டி ஓட்டி
கொண்டு இருப்பவர், ஊரின் முதல் மருத்துவர், பொறியாளர், ஆட்டோ ஓட்டுநர், ஒளிப்படப்
பதிவாளர்கள், ஒலிபெருக்கி அமைப்பாளர்கள், தையற் கலைஞர் தொழில் முனைவோர்கள் என எல்லாருடைய வரலாறுகளையும் பதிவு செய்து
இருக்கிறார் அண்ணன் அருணகிரி.
இந்த ஊரில், இந்திய
விடுதலைக்கு முன்பே ராம் ரகீம் என்ற பெயரில் ஒரு கூரைக்கொட்டகை இருந்தது என்று
செய்தி எனக்குப் பெரும் வியப்பாக இருந்தது. அதைப் பற்றி மேலும் விரிவான தகவல்களை
அறிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டு இருக்கின்றது.
இந்த நூல், ஒரு பேரனை
தாத்தா சங்கரன்கோவில் வீதிகளில் கைபிடித்துக் கூட்டிச் செல்லும் உணர்வைத்
தருகின்றது. ஒவ்வொரு தலைமுறையிலும் நகரம் தன்னை தகவமைத்து கொள்கின்றது. ஒவ்வொரு
தலைமுறையிலும் இது போல் ஒரு ஆவணம் இருந்தால் அந்த நகரத்தின் கடந்த காலத்திற்கு
மீண்டும் மீண்டும் பயணித்து கொள்ளலாம்.
அதற்கு இந்த சங்கரன்கோவில் வரலாறு புத்தகம் வழிகாட்டுகின்றது.
Comments
Post a Comment