சிவகுருநாதபுரம் தேர் திருவிழா
திருவிழா நாளை காலண்டரில் தேடி இறங்கு வரிசையில் குறித்து வைத்துக்கொண்டு என்னமா இன்னும் அவ்வளவு நாளா என அம்மாவிடம் மீண்டும் மீண்டும் திருவிழா நாளை உறுதிப்படுத்தி கொண்டு அப்பாமையிடம்(அப்பாவின் அம்மா) தொடங்கி பெரியப்பா வரை திருவிழா காசு வாங்கி என்ன வாங்கலாம், தேர் திருவிழாவில் மட்டுமே கேக்கமுடிந்த நகரத்து தங்க தேர் பாடல் வரை பல்வேறு திருவிழாவின் எதிர்பார்ப்புகள் ஏராளம்.
இந்த கோடையிலும் கரு மேகம் சூழ்ந்து இருக்கும் பொதிகை தன் சாரலை கொஞ்சம் காட்டிவிடுவதற்கான சாத்திய கூறுகளை வெளிப்படுத்திக்கொண்டு இருப்பாள் இந்தநாளில்
இன்னைக்கும் ஸ்குலா என சலிப்போடுதான் அன்றைய பொழுது விடியும். அரை பள்ளிக்கூடம்தான போய்ட்டுவா என அம்மாவின் அதட்டல் இருக்கும். ஸ்குல சைக்கிளை வழக்கமாக விடும் இடத்தில் இல்லாமல் முதல் ஆளாக கிளம்ப தயார் நிலையில் திருப்பி நிறுத்த பட்டு இருக்கும். உள்ளே போனால் பாதிபேர் இருக்கமாட்டார்கள் இது நமக்கு முன்னாடியே தெரியும் ஆனாலும் வீட்டில் நமக்கு விடுமுறைக்கு அனுமதி இருக்காது என்பதால் வேறு வழி இல்லாமல் அந்த 4 மணி நேரத்தை பள்ளியில் கடத்த வேண்டும். பெரும்பாலும் அவை இன்று சாயங்காலம் என்ன செய்யலாம் என்ற திட்டமிடல்தான் இருக்கும்.
மதியம் 12.35 க்கு சத்தம் எழுப்பும் பள்ளி மணியின் அதிர்வுகள் குறையும் முன் சைக்கிள்கள் பள்ளி வளாகத்தை தாண்டி இருக்கும். மதியம் 1 மணி அளவில் கோவிலின் வெளி மண்டபத்தில் ஒரு ஒரு 1/2 மணி நேரம் செண்டை மேளம் முழங்கம் தொடரும் அப்போது சிறுவர்கள் மற்றும் 60,70 களை கடந்தவர்களும் குழுமியிருப்பார்கள். பெரும்பான்மை மக்களுக்கு கோவிலுக்கு கிளம்ப சமிக்ஞையாக அவை இருக்கும். போர்வை மட்டும் தண்ணீர் பாட்டில்களுடன் நொருக்கு தின்பண்டங்களுடன் மக்கள் கூட்டம் கோவில் வளாகத்தின் மேற்கில் இருந்து ஆக்கிரமிப்புகள் செய்ய தொடங்குவார்கள். அவர்களின் போர்வை பரப்பளவிற்க்கு ஏற்ப எல்லைகள் வகுக்க பட்டு இருக்கும். கோவில் வளாகத்தின் உட்ப்புறத்தில் கடைகள் ஒழுங்கு படுத்தப்படும் பெரும்பான்மை ஐஸ் வண்டிகள் வெளியேற்ற பட்டு கொண்டு இருக்கும்.சிறுவர்கள் இந்த திருவிழாவிற்க்காக சர்பத் கடை போடுவார்கள் அங்கு 5 பைசா, 10 பைசா மற்றும் 20 பைசா பாட்டில் இருக்கும் காலப்போக்கில் அவை 25,50 என மாறியது அதைபோல் கேசரி கடை , துட்டு குடம் போன்றவை சிறுவர்களால் நடத்தப்படும் வியாபாரம் ஆனால் அவை ஒன்றாம் திருவிழா தொடங்கி புதன் கிழமை காலையோடு முடிந்து விடும். சீவல் ஐஸ் திருவிழாவின் போது மட்டுமே கிடைக்கும் ஒன்றாகவே இருந்தது.
கோவில் வளாகத்தின் வடக்கு சுவர் கொஞ்சம் உயரமாக இருக்கும் அதன் மேல் எற இளைஞர்கள் கூட்டம் முண்டும். கோவில் வளாகத்தின் உள்ளே நுழைந்தவுடன் வலது பக்கம் இருக்கும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் மோர்பந்தல் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறுவார்கள். அலங்காரப்படுத்த பட்ட யானை தேரின் முன்புறம் நிறுத்த பட்டு இருக்கும்.சிறுவர்கள் பலர் யானை சவாரி செய்வார்கள் மேலே ஏறி ஒரு 15 மீட்டர் முன்னே சென்று பின்னே வரும் அதற்கு அப்போது 10 ரூபாய் என நினைக்கிறேன். வருடம் சரியாக நினைவில்லை இந்த தேர் திருவிழாவின் பொது என் பெரிய பெரியப்பாவின் நண்பருடைய யானை என்பதால் அதில் நீண்ட நேரம் அமர்ந்து இருக்க அனுமதிக்கப்பட்டு இருக்கிறேன்.
தேர் நிலையில் இருந்து புறப்படும் பொது யானை அதற்கு பின் சிலம்பம், சுருள்வாள் வீச்சு என இந்த மண்ணின் பாரம்பரிய விளையாட்டு நடைபெறும் இந்த மண்ணின் மைந்தர்கள் தங்கள் திறமையை ஊருக்கு காட்டிக்கொண்டு இருப்பார்கள். புலி ஆட்டமும் அதில் அடங்கும். அவர்களுக்கு பின் செண்டை மேளம், நாசஸ்வரம் என திருவிழா களைக்கட்டும். அதற்கு பின் தேர்
எனக்கு தேர் என்ற வார்த்தையில் விருப்பம் இல்லை ரதம் என்பதே சரி என எண்ணுகிறேன். தேர் என்றவுடன் எல்லாருக்கும் முதலில் நினைவில் வருவது மிக பெரிய சக்கரம் தான் ஆனால் இங்கு அப்படி அல்ல சிறிய அளவிலான சக்கரம் அதன் மேல் ஒரு ரதத்தின் முன்புறம் ஜோடி குதிரை இருக்கும், பெண்பால் பிள்ளைதமிழின் பத்தவது பருவமான ஊசல் கோலத்தில் அம்மை வீற்று இருப்பாள் பிள்ளை தமிழ் போல் அவள் புகழ்பாடி கொண்டு இருப்பார்கள். ஊஞ்சலை சுற்றியும் உள்ள தூண்களில் யானை மற்றும் இன்னுமோரு விசித்திரமான விலங்கின் உருவம் இருக்கும் அதன் பெயர் நினைவில் இல்லை யாரோ சொல்லி கேள்வி பட்டு இருக்கேன். அவை மேல் கூரையை தாங்கி இருப்பது போல் ஒரு தோற்றம் இருக்கும். மேல் அடுக்கு மணிகளால் நிறைந்து காணப்படும். ரதத்தை நிறுத்த இடையில் போடப்படும் தடுப்பில் ரதம் குலுங்கும் அப்போது அதிர்வினால் எழும்பும் மணி ஓசை தனி இசைதான். ரதம் நகரத்தொடங்கியதும் நகரத்து தங்க தேர் பாடல் ரதம் நிலையில் இருந்து கிளம்பியதன் அறிகுறி. வடக்கு ரதவீதியில் ரதம் வந்து சேர்வதுதான் தாமதம். கோவில் வளாகம் அதன் முழு கொள்ளளவையும் நிரப்பிவிடும் மற்றும் வடக்கு , கிழக்கு ரத வீதி மக்கள் அங்கும் இங்கும் இடப்பெயர்ப்பு நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். வடக்கு ரத வீதியில் தற்போது SBI இருக்கும் இடத்தில் மின் விளக்குகளால் லட்சுமி உருவம் உருவாக்கப்பட்டு லட்சுமி பிராண்டு விளம்பரம் இருக்கும் மற்றும் கிழக்கு ரத வீதியின் வீட்டு மாடிகளில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். இவை கோவில் வளாகத்தில் இருந்து பார்த்தால் இரவில் நன்கு தெரியும். வடபுறம் இருக்கும் விளம்பரம் ரதத்தின் அளவு உயர்ந்து காணப்படும். இதை போல் கோவில் வாசல் மற்றும் கலையரங்கம் தென் புறமும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் அவற்றில் தெய்வத்தின் உருவங்கள் இடம் பெற்று இருக்கும். ரதம் தெற்கு வீதியில் வரும் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கும். சுரண்டை - தென்காசி, சுரண்டை - செங்கோட்டை, சுரண்டை - கடையநல்லூர் பேருந்துகள் தற்காலிக பேருந்து நிலையமாக திருமண மண்டபத்தின் முன்புறம் செயல்படும். தெற்கு ரத வீதி கடந்து மேற்கு ரத வீதி ஒரு பாலம் மட்டுமே அங்கு வரும்போது இருள் சூழ்ந்து மின் விளக்கு ஒளியால் தொலைவில் இருந்து பார்ப்பவர்களும் அம்மையை தரிசிக்க முடியும். இப்போது கலையரங்கத்தை செண்டை மேளா குழுவினர் கைப்பற்றி இருக்கக்கூடும்.
இப்போது இவற்றில் பெரும்பான்மை மாறியிருக்கக்கூடும்.
அப்போது உறவினர் பலர் வந்திருக்க கூடும், மாமா மகளின் முதல் தடவையாக தாவணியில் பாத்து ரசிக்க கூடும். ஊரில் பல கன்னி பெண்களும் புதிய ஆடையில் தங்கள் அழகை காட்டும் அந்த ஒரு நாள் இது...
ReplyDelete- (15 வயது பக்குவம் அவ்வளவு தான்)..